Tuesday, September 15, 2009

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் : இறைவனின் அதிசய படைப்புகளில் ஒன்று.

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்)
.
.
உலகில் குளிர்ப்பிரதேசங்களை தங்களது வாழும் இடமாகக் கொண்டிருக்கும் அநேகமான பூச்சியினங்கள் - கடுமையான குளிர்காலம் வரும்பொழுது குளிரின் காரணமாகவோ அல்லது சரியான உணவு இல்லாமலோ இறந்து போகின்றன. ஏனென்றால் பூச்சியினங்கள் கடுங்குளிரை தாங்க முடியாத மென்மையான உடலமைப்பைக் கொண்டவை. எனினும் பனிப்பிரதேசத்தில் வாழும் ஒருசில பூச்சியினங்கள் மேற்கண்ட விதிக்கு மாற்றமாகத் திகழ்கின்றன. உதாரணத்திற்கு பட்டாம்பூச்சிபோல் தோற்றமளிக்கும் ஒருவகை பூச்சியினம் பார்க்கும்போது மிகவும் மென்மையாகத் தோன்றும் பூச்சியினமாகும். ஆனால் உண்மையில் அவைகள் கடுங்குளிரையும் தாங்கி உயிர்வாழக்கூடிய வலிமை படைத்தவை. எனவே தான் அவைகள் 'பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள்' என்றழைக்கப்படுகின்றது.
.
.
சாதாரண பட்டாம்பூச்சிகளைப் போலவே இவைகளுக்கும் அதன் உடற்பகுதியில் இணைக்கப்பட்ட இரண்டு இறக்கைகள் உண்டு. இந்த பட்டாம்பூச்சிகள் பனிப்பிரதேசத்தில் பறக்க வேண்டுமெனில் இதன் மார்பில் இறக்கைகள் இணைக்கப்பட்டிருக்கும் பகுதியின் வெப்ப நிலை முப்பது டிகிரி சென்டிகிரேடாக இருக்க வேண்டும். ஆனால் அவைகள் உயிர்வாழும் பனிப்பிரதேசத்தின் வெப்ப நிலை சைபர் டிகிரி சென்டிகிரேடு அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் இந்தவகை பட்டாம்பூச்சிகள் இத்தனை கடுமையான குளிரில் எப்படி உயிர்வாழ்கின்றன? பறக்காமல் அசைவின்றி இருக்கும்போது, அவைகளை குளிரில் உரைந்து போகவிடாமல் தடுப்பதோடு மட்டுமின்றி, அவைகளை கடுங்குளிரில் எந்தவித பாதிப்புமின்றி பறக்கச் செய்வது எது?

உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேகமான உடலமைப்புடன், கடுங்குளிரிலும் பறந்து செல்லும் விதத்தில் இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சி படைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். இந்த உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேக அமைப்பு இன்னும் ஏராளமான வசதிகளைக் கொண்டது.

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு முன்பு தங்களது முக்கிய தசைகளில் இணைக்கப் பட்டிருக்கும் இறக்கைகளை தொடர்ந்து அசைக்கிறது. இந்த தொடர் அசைவு இதன் மார்புப் பகுதியின் உள் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. அல்லாஹ் படைத்த இந்த பிரத்யேக அமைப்பு, பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடல் வெப்பநிலையை சைபர் டிகிரி சென்டிகிரேடிலிருந்து முப்பது டிகிரி சென்டிகிரேடுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அதிகரிக்கச் செய்கிறது. இந்த வெப்பநிலை பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் கடுங்குளிரில் உயிர்வாழ போதுமானதாகும். இருப்பினும், பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறந்து செல்ல வேண்டுமெனில் தங்களது உடலின் வெப்பநிலையை மாத்திரம் அதிகரித்தல் போதுமானதன்று.


குளிர்பிரசேத்தின் வெப்ப நிலைக்கும், பட்டாம்பூச்சிகளின் உடலில் உள்ள வெப்ப நிலைக்கும் வித்தியாசம் இருப்பதால், பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் உடலில் உள்ள வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். ஒரு குவளையில் இருக்கும் சூடான தேநீர் சிறிது நேரத்தில் குளிர ஆரம்பிப்பது போல, பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும். எனவே பட்டாம்பூச்சி தனது உடலில் உள்ள வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமின்றி, அதே அளவு வெப்பநிலையை தனது உடலில் தக்க வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

குளிர்பிரதேசத்தில் வாழும் பட்டாம்பூச்சிகள் உயிர்வாழவும், பறக்கவும் வேண்டுமெனில் அதன் உடலில் உள்ள வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளவென இன்னொரு அமைப்பும் தேவைப்படுகிறது. பனிப்பிரதேச பட்டாம்பூச்சியின் இந்தத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் படைப்பளார்களில் எல்லாம் மிகைத்த படைப்பாளன் அல்லாஹ், அதற்கு இன்னும் ஒரு பிரத்யேக அமைப்பை கொடுத்திருக்கிறான். பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு - வெப்பம் குறைவதை அடியோடு தடுக்கும் அடர்த்தியான செதில்களை கொண்டுள்ளன. அடர்த்தியான செதில்கள் இல்லாத பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள், அடர்த்தியான செதில்களை கொண்டுள்ள பட்டாம் பூச்சிகளைவிட இருமடங்கு விரைவாக குளிரினால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன என ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


மேற்கூறியவைகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இறைவன் வழங்கிய இயந்திரங்கள். மேற்கூறிய வசதிகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் இவ்வுலகில் தோன்றிய நாள் முதலே அவைகளோடு உள்ளவை. இல்லையெனில் கடுங்குளிரினால் இறந்துபோயிருக்கும் இந்த இனம் நாளடைவில் அழிந்தே போயிருக்கும். கடுமையான குளிர்ப்பிரதேசங்களில் வசிக்கும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் மற்ற பட்டாம்பூச்சியினங்களை விட சிறப்பியல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்றும், அவைகள் கொண்டிருக்கும் சிறப்பியல்புகள் யாவும் எதேச்சையாக கிடைத்தது அல்ல என்பதை விளங்கிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.



கடுங்குளிரிலும் உயிர்வாழக் கூடிய சிறப்பியல்புகளை படைப்பாளர்களில் எல்லாம் மேன்மையான படைப்பாளன் வல்ல அல்லாஹ்வே இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளுக்கு வழங்கியிருக்கிறான். அந்த படைப்புகள் அனைத்தையும் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. இது பற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான் :

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்).

No comments:

Post a Comment

COMMENTS PLEASE....!